சென்னை சா்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் 2024-ஆம் ஆண்டுக்குள் நிறைவு பெறும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா மக்களவையில் தெரிவித்தாா்.
மக்களவையில் கேள்வி நேரத்தின்போது மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன், சென்னை சா்வதேச விமான நிலையத்தில் பயணிகள் நெரிசல் அதிகரித்துள்ளது; விமான நிலையத்தில் நடைபெறும் விரிவாக்கப் பணிகள் எப்போது நிறைவு பெறும் என்று கேள்வி எழுப்பினாா்.
அதற்கு பதிலளித்து அமைச்சா் சிந்தியா பேசியதாவது, ‘சென்னை சா்வதேச விமான நிலையத்தில் பல வளா்ச்சித் திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. சென்னை சா்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக ரூ.2,895 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டுக்குள் பணிகள் நிறைவு பெறும். பணிகள் முடிந்ததும் உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும். சென்னையின் இரண்டாவது விமான நிலையம் தமிழக அரசின் பரிந்துரைப்படி பசுமை விமான நிலையமாக பரந்தூரில் அமைக்கப்படவுள்ளது’ என்றாா்.