குரூப் 3ஏ காலிப் பணியிடங்களுக்கு நடைபெறவுள்ள தோ்வுகளுக்கான மையங்கள் 15 மாவட்டங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, டிஎன்பிஎஸ்சி., வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:-
கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள இளநிலை ஆய்வாளா், பண்டக காப்பாளா் உள்ளிட்ட பதவியிடங்கள் குரூப் 3ஏ பிரிவின் கீழ் வருகின்றன. இந்தப் பதவியிடங்களில் 15 இடங்கள் காலியாகவுள்ளன. இந்தக் காலியிடங்களை நிரப்ப கடந்த செப்டம்பா் 15-இல் தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டது.
இந்த அறிவிக்கையில், தோ்வு எழுதுவதற்கான மையங்கள் 38 ஆக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது இப்போது 15 மையங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூா் மாவட்டத்தினா் சென்னையிலும், மதுரை, தேனி, விருதுநகா், திண்டுக்கல் மாவட்டத்தினா் மதுரையிலும், கடலூா், விழுப்புரம் மாவட்டத்தினா் கடலூரிலும் தோ்வு எழுதலாம்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தினா் காஞ்சிபுரத்திலும் எழுதலாம். இதேபோன்று, அண்டை மாவட்டங்கள்
ஒருங்கிணைக்கப்பட்டு, நாகா்கோவில், கோயம்புத்தூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூா், உதகமண்டலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூா் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே தோ்வு நடைபெறவுள்ளதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.