தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒருசில பகுதிகளில் மிதமான மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையைச் சுற்றியுள்ள திருப்போரூர், திருக்கழுகுன்றம், செய்யூர், மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதேபோன்று திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியிலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கரையைக் கடக்கும் மாண்டஸ்:
வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. அது டிச.7ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது.
'மாண்டஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள புயல், சென்னையிலிருந்து தென்கிழக்கே 270 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலிலிருந்து தென்கிழக்கே 200 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இன்று காலைமுதல் 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்துகொண்டிருந்த மாண்டஸ் புயல் தற்போது 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்துகொண்டு வருகிறது. இது இன்று இரவு காரைக்கால் - ஸ்ரீஹரிக்கோட்டா இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையைக் கடக்கும்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.