மாண்டஸ் புயல் காரணமாக ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால் மெரீனாவில் சமீபத்தில் திறக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பாதை உடைந்து சேதமடைந்துள்ளது.
வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி படிப்படியாக நெருங்கி வருவதாகவும் இன்று(டிச. 9) நள்ளிரவு முதல் நாளை(டிச. 10) அதிகாலைக்குள் காரைக்கால் - ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாண்டஸ் தீவிர புயலாக மாறியுள்ளதால் நேற்று முதல் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடற்கரைகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை மெரீனாவில் ஏற்பட்ட கடல் சீற்றத்தினால் சமீபத்தில் திறக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பாதை உடைந்து சேதமடைந்துள்ளது.
முன்னதாக, சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மெரீனாவில் ரூ.1 கோடியே 14 லட்சம் செலவில் மரத்தால் அமைக்கப்பட்ட நாட்டின் முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை கடந்த நவம்பர் 27 ஆம் தேதி திறக்கப்பட்டது. இது 263 மீ நீளமும், 3 மீ அகலமும் கொண்டது.
புயல் காரணமாக வட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழைபெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | மாண்டஸ் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் சிவப்பு, ஆரஞ்சு எச்சரிக்கை?