தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மாண்டஸ் புயல் காரணமாக, பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. அது டிச.7ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
'மாண்டஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள புயல், சென்னையிலிருந்து 320 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலிலிருந்து 240 கிலோ மீட்டர் தொலைவிலும் மாண்டஸ் நிலைகொண்டுள்ளது.
இதையும் படிக்க | இன்று கரையைக் கடக்கிறது மாண்டஸ் புயல்: நாளை வரை அதிபலத்த மழை
கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்துகொண்டிருந்த நிலையில் தற்போது 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் மாண்டஸ் புயல் வெள்ளிக்கிழமை நள்ளிவு முதல் சனிக்கழமை அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மாண்டஸ் புயல் காரணமாக, பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மாண்டஸ் புயல் வெள்ளிக்கிழமை கரையை கடக்க உள்ள நிலையில், மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றம் காரணமாக, வெள்ளிக்கிழமை (டிச.9) ஒரு நாள் மட்டும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.