'மாண்டஸ்' புயல் காரணமாக மெரினா கடற்கரையில் தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
புயல் இன்று இரவு கரையைக் கடக்கவுள்ள நிலையில், பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்து வருவதால், பொதுமக்கள் யாரும் கடற்கரைக்கு வர வேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. அது டிச.7ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது.
'மாண்டஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள புயல், சென்னையிலிருந்து தென்கிழக்கே 270 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலிலிருந்து தென்கிழக்கே 200 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இன்று காலைமுதல் 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்துகொண்டிருந்த மாண்டஸ் புயல் தற்போது 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்துகொண்டு வருகிறது. இது இன்று இரவு காரைக்கால் - ஸ்ரீஹரிக்கோட்டா இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் புதுச்சேரி, காரைக்கால் கடலோரப் பகுதிகளுக்கு யாரும் வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினாவிலும் பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
கடற்கரையில் பொதுமக்கள் வருகையைத் தடுக்கவும், கண்காணிக்கவும் தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.