திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அடுத்த வேளுக்குடி அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, கலச ஊர்வலம் நடைபெற்றது.
வேள்விக்குடி என்ற வேளுக்குடியில் மிகப் பழமையான கோயிலான அங்காளப் பரமேஸ்வரி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், அங்காளப் பரமேஸ்வரி எழுந்தருளியுள்ளார். பழமையான இக்கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, கும்பாபிஷேகம் வரும் 11ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் கணபதி பூஜை, நவக்கிரக ஹோமம், திசா ஹோமம், மூர்த்தி ஹோமம் மற்றும் கிராம சாந்தி பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து, வெள்ளிக்கிழமை, காலை கோயில் அருகே ஓடக்கூடிய வெள்ளியாற்றிலிருந்து, புனித நீரும், விமானக் கலசங்களும் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டன. மன்னார்குடி - திருவாரூர் பிரதான சாலை வழியாக, கொட்டும் மழையிலும் ஏராளமான பக்தர்களுடன், நாதஸ்வர முழக்கங்களுடன் கலச ஊர்வலம், அங்காளம்மன் கோயிலை வந்தடைந்தது.
தொடர்ந்து, அங்காளப் பரமேஸ்வரிக்கு தீபாராதனைக் காண்பிக்கப்பட்டது. யாகசாலை பூஜைகளை, சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார், கணேஷ் குருக்கள் உள்ளிட்டோர் கவனிதனர்.கும்பாபிஷேக ஏற்பாடுகளை, வேளுக்குடி ஸ்ரீலஸ்ரீ சடையப்ப பரம்பரை பூசாரியார் வி.எஸ்.ரமேஷ்குமார், வி.எஸ்.ராஜு மற்றும் கோயில் நிர்வாகக் குழுவினர்கள், கிராமவாசிகள் மற்றும் பக்தர்கள் உள்ளிட்டோர் கவனித்து வருகின்றனர்.