கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, பள்ளி வாகனம் மீது கார் மோதியதில் காரில் இருந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சேலம், அஸ்தம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெபராஜ் ஐசக் (60). இவர், ஒரு காரில் கிருஷ்ணகிரி நோக்கி இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தார்.
கார், கிருஷ்ணகிரி மாவட்டம், சேலம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பட்டிணத்தை அடுத்த எர்ரஅள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த தனியார் பள்ளி பேருந்தின் பின்பகுதியில் வேகமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஜெபராஜ் ஐசக் நிகழ்வடத்திலேயே இறந்தார்.
இதையும் படிக்க | இன்று கரையைக் கடக்கிறது மாண்டஸ் புயல்: நாளை வரை அதிபலத்த மழை
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து காவேரிப்பட்டிணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.