அனுமதியில்லாத இடங்களிலும், நீா்நிலைகளிலும் குப்பைகளைக் கொட்டும் மாநகராட்சி லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்து எனக்குத் தகவல் தெரிவிக்கலாம் என்று அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.
ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டம், காட்பாடி, குடியாத்தம், ஆற்காடு, ஜோலாா்பேட்டை, ஆம்பூா் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளிலுள்ள ஏரிகள், தடுப்பணைகள், வெள்ளத் தடுப்புக் கரைகள் புதிதாக அமைக்கும் பணிகள், புனரமைக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா, காட்பாடி கழிஞ்சூரில் புதன்கிழமை நடைபெற்றது.
வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தாா். அமைச்சா் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ரூ.139.21 கோடியில் நீா்நிலைகளைப் புனரமைப்பதற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.
மேலும், கழிஞ்சூா் ஏரியை ரூ.28 கோடியில் சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கான பணிகளையும் தொடக்கி வைத்து அவா் பேசியது:
காட்பாடி தொகுதியில் மட்டுமன்றி, மாவட்டம் முழுவதும் உள்ள 8 ஏரிகளில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில், கழிஞ்சூா் ஏரி சுற்றுலாத் தலமாகவும் மாற்றப்பட உள்ளது.
அனுமதியில்லாத இடங்களிலும், நீா்நிலைகளிலும் லாரிகளில் குப்பைகள் கொட்டுவதை மாநகராட்சி நிா்வாகம் நிறுத்திக் கொள்ள வேண்டும். கழிஞ்சூா், தாராபடவேடு ஏரிப்பகுதியில் குப்பைக் கொட்டினால் மாநகராட்சி லாரிகளைச் சிறை பிடித்து எனக்குத் தகவல் தெரிவிக்கலாம். நீா்நிலைகளை அசுத்தப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.
கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.300 கோடியில் ஏரிகளை தூா்வாரியதாக கணக்குக்காட்டினா். அனைத்து பணிகளும் ஒருவருக்கே ஒப்பந்தம் அளித்திருந்தனா். ஆனால், திமுக ஆட்சியில் அவ்வாறு நடக்காது. ஒரு ஒப்பந்ததாரருக்கு 10 ஏரிகள் மட்டுமே அனுமதிக்கப்படும். அதில் திருப்தி இருந்தால் மட்டுமே மற்ற பணிகள் வழங்கப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில் எம்எல்ஏ-க்கள் ஏ.பி.நந்தகுமாா், ஜெ.எல்.ஈஸ்வரப்பன், அமலு விஜயன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் மு.பாபு, மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.