'மாண்டஸ்' புயல் காரணமாக திருவண்ணாமலை, நாமக்கல் மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் நாளை கரையைக் கடக்கவுள்ள நிலையில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.
வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. அது நேற்றிரவு 11.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது.
'மாண்டஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள புயல், இன்று பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி, காரைக்காலிலிருந்து கிழக்கு - தென்கிழக்கே 390 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கே 480 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருக்கிறது.
இதனால், பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (டிச.9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே சென்னை உள்பட 18 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.