மாண்டஸ் புயல் பாதிப்புகள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரனுடன் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. அது நேற்றிரவு 11.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது.
இந்நிலையில் மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருகிறது. தற்போது காரைக்காலுக்கு கிழக்கு - தென் கிழக்கே 460 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு 550 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது.
டிசம்பர் 9-ம் தேதி நள்ளிரவு மாண்டஸ் புயல் புதுச்சேரி-ஸ்ரீரிகோட்டா இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிச.10-ம் தேதி கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மாண்டஸ் புயல் பாதிப்புகள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரனுடன் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
காவல் துறை, தீயணைப்புத் துறை, முப்படை அதிகாரிகள், வருவாய்த் துறை, வேளாண் துறை உள்பட பல்வேறு துறை சார்ந்த செயலாளர்களும் பங்கேற்றுள்ளனர்.