மாண்டஸ் புயலை எதிர்கொள்ளவேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தென்மண்டல ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரனுடன் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
ஆலோசனைக் கூட்டத்தில் காவல்துறை, தீயணைப்புத்துறை, பேரிடர் மீட்புப் படை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வு படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. அது நேற்றிரவு 11.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது.
இந்நிலையில் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருகிறது. தற்போது காரைக்காலுக்கு கிழக்கு - தென் கிழக்கே 460 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு 550 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது.
டிசம்பர் 9-ம் தேதி நள்ளிரவு மாண்டஸ் புயல் புதுச்சேரி-ஸ்ரீரிகோட்டா இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
படிக்க: புயல் எதிரொலி: திருவள்ளூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
சென்னையை பொருத்தவரை, ஒருசில இடங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிகக் கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயலை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலில்,
- புயல் எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மரங்களில் அருகாமையில் நிற்பதை மக்கள் தவிர்க்க வேண்டும்.
- பொதுமக்கள் அவசர உதவி, புகார்களைத் தெரிவிக்க 1913 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
- பொதுமக்கள் தங்க வைப்பதற்காக 169 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
- தற்காலிகமாக அமைக்கப்பட்டு கூடாரங்களின் கீழ் நிற்பதை மக்கள் தவிக்க வேண்டும்.