காஞ்சிபுரம்: புயலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டிருப்பதாக ஆட்சியர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வானிலை ஆய்வு மைய அறிவிப்பைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
பேரிடர் இடையூறுகளை எதிர்கொள்ள மாவட்டத்தில் 21 மண்டலக்குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவில் காவல் துறை, தீயணைப்புத் துறை, மின்வாரியம் உள்ளிட்ட 11 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் இடம் பெற்றிருக்கிறார்கள்.
இவர்கள் அவரவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தங்கியிருந்து மீட்பு பணியில் ஈடுபடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசும் போது பதட்டமடைய வேண்டாம். மரங்கள், மின்கம்பங்கள் அருகில் நிற்பதை தவிர்த்து விடவும். முக்கியமாக காய்ச்சிய குடிநீரையே பருகுங்கள், தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.
பேரிடர்கள் தொடர்பான தகவல்கள் இருந்தால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம்.
அதற்கான தொலைபேசி எண்-044}27237107 அல்லது கைபேசி எண் 9345440662 என்ற எண்களில் தெரிவிக்குமாறும் ஆட்சியரது செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.