அரக்கோணம்: அரக்கோணம் ஊராட்சி ஓன்றிய அலுவலகத்தில் அம்பேத்கரின் உருவப்படம் அகற்றப் பட்டதை கண்டித்து வியாழக்கிழமை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
அரக்கோணம் ஊராட்சி ஓன்றிய அலுவலகத்தில் டிசம்பர் 6 ஆம் தேதி அம்பேத்கர் நினைவுநாளையொட்டி அவரது உருவப்படம் வைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். மேலும், அந்த உருவப்படத்தை அங்கேயே மாட்டச்சொல்லி கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து மறுநாள் அம்பேத்கர் உருவப்படம் அங்கிருந்து அகற்றப்பட்டதாக தெரிகிறது. இதனைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில இளைஞரணி துணை செயலாளர் ந. தமிழ்மாறன் தலைமையில் அரக்கோணம் திருத்தணி நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிப்படைந்தது.
இதையடுத்து அங்கு வந்த நகர காவல் ஆய்வாளர் சாலமன் ராஜா போராட்டக்காரர்களை சமாதானம் செய்ததை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.