நாமக்கல்: நாமக்கல் அருகே சாலை விபத்தில் காவல் உதவி ஆய்வாளர் ரங்கராஜ் பலியானார்.
திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் ரங்கராஜ்(57). இவர் நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
புதன்கிழமை இரவு பணியில் இருந்த அவர் இரவு 11 மணி அளவில், பெரிய மணலி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரங்கராஜ் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடினார். இதனை பார்த்த அந்த பகுதியினர் எலச்சிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிக்க | அவிநாசி அருகே வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து!
உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் இறந்து போனார். அவரது உடல் அரசு மருத்துவமனையில் உடல் கூறாய்வு செய்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தகவல் அறிந்து அங்கு வந்த உறவினர்கள் ரங்கராஜன் உடலை பார்த்து கதறி அழுதனர்.
விபத்தில் இறந்து போன காவல் உதவி ஆய்வாளர் ரங்கராஜுக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.