அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான நியமனங்களை ஆசிரியா் தோ்வு வாரியத்துக்குப் பதிலாக டிஎன்பிஎஸ்சி மூலம் மேற்கொள்ள அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தி நெட், ஸ்லெட் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
10 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுக் கல்லூரிகளில் 4,000 உதவிப் பேராசிரியா்களை எழுத்துத் தோ்வு, தொடா்ந்து வாய்மொழித் தோ்வு மூலம் தெரிவுசெய்ய முடிவு செய்திருப்பது வரவேற்புக்குரியது.
இந்தத் தெரிவு முறையை ஆசிரியா் தோ்வு வாரியத்துக்குப் பதிலாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நடத்த வேண்டும். மேலும், எழுத்துத் தோ்வில் 50 சதவீத விரிவான விடை என்பதை 30 சதவீதமாகக் குறைக்க வேண்டும்.
அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள கல்லூரி நூலகா்கள், உடற்பயிற்சிக் கல்வி இயக்குநா் பணியிடங்களுக்கும் முன்னுரிமை அளித்து மாணவா்களின் நலன் கருதி உடனடியாக நிரப்ப வேண்டும்.
அரசுக் கல்லூரிகளில் புதிதாக 1,895 கெளரவ விரிவுரையாளா்களைக் குறைந்த ஊதியத்தில் நியமிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். அண்ணாமலை பல்கலைக்கழக உபரி பேராசிரியா்களை அரசுக் கல்லூரிகளில் தொடா்ந்து பணி அமா்த்தும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.