வங்கக்கடலில் உருவாகவுள்ள மாண்டஸ் புயல், புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே கரையை கடக்கும் என்று தென்மண்டல வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டுள்ளது. இது இன்று மாலை புயலாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியதாவது:
மேற்கு-வடமேற்கு திசையில் சென்னைக்கு 770 கி.மீ. தொலைவில் மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது. இது இன்று மாலை புயலாக வலுபெறவுள்ளது.
புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே டிச. 9ஆம் தேதி இரவு புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது. டிசம்பர் 9 மாலை முதல் டிசம்பர் 10 காலை வரை 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
டிச. 9-ல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.