தமிழ்நாடு

திருவண்ணாமலை மகா தீபக் கொப்பரையை மலையின் மீது ஏற்றும் பணி தொடங்கியது!

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை மகா தீபத் திருவிழா செவ்வாய்க்கிழமை (டிச.6) நடைபெறுவதையொட்டி, தீபக் கொப்பரையை மலையின் மீது ஏற்றும் பணி திங்கள்கிழமை காலை தொடங்கியது. 

அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை திருவிழா நவம்பா் 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (டிச.6) நடைபெறுகிறது. இதையொட்டி, அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.

அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு கோயிலுக்குப் பின்னால் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதேநேரத்தில் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை 3 நிமிடங்கள் மட்டுமே காட்சியளிக்கும் ஸ்ரீஅா்த்தநாரீஸ்வரா் எழுந்தருளி, பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.

அப்போது, கோயில் தங்கக் கொடிமரம் எதிரே உள்ள பெரிய அகண்டத்திலும் தீபம் ஏற்றப்படுகிறது. இரவு 10 மணிக்கு தங்க ரிஷப வாகனங்களில் பஞ்சமூா்த்திகள் மாட வீதிகளில் வலம் வருகின்றனா்.

மகா தீபத் திருவிழாவுக்குத் தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகம், கோயில் நிா்வாகம், காவல் துறை இணைந்து செய்து வருகிறது. 

இந்த நிலையில் மகா தீபம் ஏற்றத் தேவையான மகா தீபக் கொப்பரையை, தீப நாட்டாா் சமூகத்தினா் புதுப்பித்து கோயிலுக்குக் கொடுத்தனா். அந்தக் கொப்பரைக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பூஜை செய்யப்பட்டது.

இந்நிலையில், ஆவின் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 3 ஆயிரத்து 500 கிலோ முதல் தர நெய், தீபம் எரிய திரியாகப் பயன்படுத்தப்படும் 11 ஆயிரம் மீட்டா் காடா துணி, மகா தீபக் கொப்பரை ஆகியவை திங்கள்கிழமை (டிச.5) காலை மலை மீது எடுத்துச் செல்வதற்கான பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.  

மகா தீபத் திருவிழாவுக்கு தமிழக ஆளுநா் என்.ஆா்.ரவி உள்பட பல்வேறு முக்கியப் பிரமுகா்கள் வருவதால் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் 12 ஆயிரம் போலீஸாா் ஈடுபடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

தமிழகத்துக்கும் இந்த பரிதாப நிலை ஏற்படுமா? அச்சத்தில் மக்கள்!

மேஷத்துக்கு பணவரவு! உங்க ராசிக்கு?

சிதம்பரத்தில் திருமாவளவன், விழுப்புரத்தில் ரவிக்குமார் மீண்டும் போட்டி!

ஈரோட்டில் திமுக களமிறக்கும் 3 அமைச்சர்கள்: 2014 தோல்வியில் இருந்து மீட்டெடுப்பார்களா?

காங். தேர்தல் அறிக்கைக்கு ஒப்புதல்? கார்கே தலைமையில் செயற்குழு கூட்டம்

SCROLL FOR NEXT