தமிழக உள் மற்றும் கடலோர மாவட்டங்களில் சனிக்கிழமை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்தி: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சனிக்கிழமை தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிச. 4: ஞாயிற்றுக்கிழமை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிச. 5: திங்கள்கிழமை தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை நிலவரம்: சென்னையில், அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
18 மாவட்டங்களில் அதிக மழை: மேலும் தமிழகத்தில் கடந்த நவம்பரில் 18 மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி கள்ளக்குறிச்சியில் 56 சதவீதம், செங்கல்பட்டில் 47 சதவீதம், சிவகங்கையில் 44 சதவீதம், தஞ்சாவூரில் 40 சதவீதம், விருதுநகரில் 36 சதவீதம், திருவாரூரில் 35 சதவீதம், கிருஷ்ணகிரியில் 29 சதவீதம், மயிலாடுதுறையில் 24 சதவீதம் இயல்பை விட அதிகமாக மழை பதிவாகி உள்ளது.
சென்னையில் 44 சதவீதம் குறைவு: அதேபோல, அரியலூரில் 52 சதவீதம், சென்னையில் 44 சதவீதம், தென்காசியில் 38 சதவீதம், கோவையில் 37 சதவீதம், காஞ்சிபுரத்தில் 36 சதவீதம், திண்டுக்கலில் 30 சதவீதம் என்று இயல்பைவிட குறைவாக மழை பதிவாகி உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.