தமிழ்நாடு காவல்துறையின் 'ஆபரேஷன் மறுவாழ்வு' என்ற அதிரடி நடவடிக்கையின் கீழ் 726 பிச்சைக்காரர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள நகர்புற சாலை சந்திப்புகளிலும், புறவழிச் சாலை சுங்கச் சாவடிகளிலும் பெண்களையும், சிறார்களையும் வைத்து பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகறிது. இவர்களை சில கும்பல்கள் இந்தத் தொழிலில் ஈடுபட வைக்கின்றனர். இதனை தடுத்து நிறுத்தும் பொருட்டு ஆபரேஷன் மறுவாழ்வு என்ற அதிரடி நடவடிக்கை இன்று தொடங்கப்பட்டது.
இதையும் படிக்க- குஜராத்தில் இருந்து காங்கிரஸை அகற்ற வேண்டும்: யோகி ஆதித்யநாத்
தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களிலும் 9 காவல் ஆணையரகங்களிலும் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 726 பிச்சைக்காரர்கள் மற்றும் 16 குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளனர். பெண்களையும் குழந்தைகளையும் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்திய நபர்களை பற்றி காவல்துறை விசாரித்து வருகிறது.
மீட்கப்பட்ட பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு இல்லத்திற்கும் குழந்தைகள் காப்பகத்திற்கும் அனுப்பப்பட்டனர். 150 நபர்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஏழைப் பெண்களையும், குழந்தைகளையும் இத்தகைய தொழிலில் ஈடுபடுத்துபவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள்.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற பெரும் நகர்களுக்கு வெகு தூரங்களில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து வந்து பிச்சை எடுக்க வைக்கும் ஆள் கடத்தல் குற்றவாளிகள் பற்றிய தகவல் 044-28447701 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். நல்ல தகவல் தருபவர்களுக்கு பண வெகுமதி அளிக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.