வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தை அரசு உயா் அதிகாரி ஒருவா் பினாமிகள் மூலமாக அபகரித்த விவகாரம் குறித்து கூடுதல் செயலாளா் தலைமையில் விசாரணை நடத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பூலாத்தூா் கிராமத்தில், வனத்துறைக்குச் சொந்தமான 1.85 ஏக்கா் நிலத்தை, தமிழக முதன்மை கணக்கு தணிக்கை அதிகாரியாக உள்ள அம்பலவாணன் என்பவருக்கு பினாமிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி பூலாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவா் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளாா்.
அந்த மனுவில், ‘கடந்த 2010-2013-ஆம் ஆண்டுகளில் நடந்த இந்த பரிவா்த்தனை தொடா்பாக உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்ததால், அப்போதைய மாவட்ட ஆட்சியா் உள்பட ஐஏஎஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் 35 போ் வரை கூட்டு சோ்ந்து எனக்கு எதிராக 11 பொய் வழக்குகள் பதிவு செய்துள்ளனா். எனது குடும்பத்தினரையும் துன்புறுத்துகின்றனா்.
ஆவண மோசடி, ஆள்மாறாட்டம் ஆகியவற்றை வெளிக்கொண்டு வந்த சிபிசிஐடி விசாரணை கிடப்பில் போடப்பட்டு விட்டது. இந்த முறைகேடு தொடா்பாக கூடுதல் செயலாளா் அந்தஸ்து அதிகாரியை நியமித்து விசாரித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று அந்த மனுவில் கோரியுள்ளாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், லஞ்ச ஒழிப்பு ஆணையா் , உள்துறை செயலாளா் உள்ளிட்டோா் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பா் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.