சேலம்: சேலம் - நாமக்கல் வழித்தடத்தில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் முக்கிய ரயில் தடங்களில் பயணிகள் ரயில்களை அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகத்தில் இயக்க தெற்கு ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக ரயில் பாதைகளை சீரமைத்து பலப்படுத்துதல் நவீன மின்மயம், ரயில் இயக்க எச்சரிக்கை விளக்குகள் மற்றும் கம்பங்களை மேம்படுத்துதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றது.
இதன்மூலம் ரயில்களின் வேகத்தை ரயில்வே நிர்வாகம் வழிகாட்டு கையேடுகளில் குறிப்பிட்டுள்ளபடி மணிக்கு 160 கிமீ மற்றும் 130 கிமீ என அதிகரிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2022-23ம் நிதியாண்டில் இதுவரை விருத்தாச்சலம் - சேலம், தஞ்சாவூர் - பொன்மலை, விழுப்புரம்- காட்பாடி,நாகர்கோவில் - திருநெல்வேலி, விழுப்புரம் - புதுச்சேரி, தஞ்சாவூர் - காரைக்கால், கோயம்புத்தூர் வடக்கு - மேட்டுப்பாளையம் பிரிவுகளில் ரயில் பாதை அமைப்பு தற்போதைய வேகமான 80, 100, 50-80, 100, 100, 50-90, 90 கிலோ மீட்டரில் இருந்து 110 கிமீக்கு அதிகரிக்க ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன.
மேலும் இந்த நிதியாண்டில் அரக்கோணம் - செங்கல்பட்டு, திருநெல்வேலி திருச்செந்தூர், தாம்பரம் - செங்கல்பட்டு, திருநெல்வேலி - தென்காசி, சேலம் - கரூர் - நாமக்கல், கடலூர் துறைமுகம் - விருத்தாச்சலம், திண்டுக்கல் - பொள்ளாச்சி, மதுரை - வாஞ்சி மணியாச்சி ஆகிய பிரிவுகளில் தற்போதைய வேகமான முறையே மணிக்கு 75-90, 70, 100, 70, 100, 60-75, 100, 100 கி.மீட்டரில் இருந்து 110 கிமீக்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரயில் பாதைகளை முழுமையாக மாற்றி அமைப்பது, தேவையான இடங்களில் 60 கிலோ கிராம் எடை கொண்ட தண்டவாளங்கள் அமைப்பது, பாலங்களை பலப்படுத்துவது, வளைவுகளை நேர்படுத்துவது, ரயில் பாதைகளில் பொதுமக்கள் கடக்கும் அனுமதி இல்லாத இடங்களில் பொதுமக்கள் கடப்பதை தடுக்க சுவர்கள் கட்டுவது, சைகை விளக்குகளை தானியங்கி விளக்குகளாக மேம்படுத்துவது, வேகத்திற்கு தடை ஏற்படுத்தும் மின்மய அமைப்புகளை மாற்றி அமைப்பது ஆகியவை முக்கிய பணிகளாகும் என தெற்கு ரயில்வே துறை தெரிவித்துள்ளது.