ஆதி திராவிட, பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஆதிதிராவிட, பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு அவர்களின் பங்குத்தொகையினை குறைத்து உதவிடும் வகையில், நடைமுறையில் உள்ள மானியத்துடன், 20 சதவீத கூடுதல் மானியம் மாநில அரசு நிதியிலிருந்து வழங்கப்படும். இதற்காக 2022-23ஆம் ஆண்டில் ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
ஒருங்கிணைந்த பண்ணையம்:
பயிர் சாகுபடியுடன், கறவை மாடு உள்ளிட்ட பல்வேறு வேளாண் சார்ந்த தொழில்களையும் ஒருங்கிணைத்து மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியம் வழங்கப்படுகிறது.
ஆதி திராவிட, பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு, கூடுதலாக 20 சதவிகிதம் அதாவது ரூ.50,000 மானியத்துடன் கூடுதலாக ரூ.20,000/- மொத்தம் ரூபாய் 70,000/- மானியமாக வழங்கப்படும். கூடுதலாக வழங்கப்படும் மானியத்திற்காக மாநில அரசு ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.
பசுமைக்குடில் / நிழல்வலைக்குடில்:
வெள்ளரி, குடை மிளகாய், கார்னேஷன் கொய்மலர், ரோஜா கொய்மலர் போன்ற பயிர்களில் பசுமைக்குடில் (Polygreen House) / நிழல்வலைக்குடில் (Shadenet) அமைப்பதற்கு தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், அனைத்து விவசாயிகளுக்கும் 50 சதவிகித மானியம் வழங்கப்படுகிறது.
ஆதி திராவிட, பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு, கூடுதலாக 20 சதவித மானியம் ஆக மொத்தம் 70 சதவிகித மானியம் வழங்கப்படு
வேளாண் பொறியியல் துறை சார்ந்த திட்டங்கள்:
கீழ்க்காணும் திட்டங்களுக்கு ஆதி திராவிட, பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு, கூடுதலாக 20 சதவிகிதம் ஆக மொத்தம் 70 சதவிகித மானியம் வழங்குவதற்காக மாநில அரசு ரூ.2.80 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.
வேளாண் இயந்திரமயமாக்கல், சூரிய கூடார உலர்த்திகள், மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள், சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டம் .
இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ?
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலமாகவோ, https://www.tnagrisnet.tn.gov.in அல்லது https://tnhorticulture.tn.gov.in அல்லது https://aed.tn.gov.in இணையதளம் மூலமாகவோ தேவையான விவரங்களை அளித்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.