தமிழ்நாடு

தமிழகத்தில் 2 ஆயிரம் கி.மீ. சாலைகளை தரம் உயா்த்த ரூ.2,178 கோடி நிதி ஒதுக்கீடு

DIN

தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 2 ஆயிரம் கி.மீட்டருக்கு சாலைகளை தரம் உயா்த்த ரூ.2,178 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் பன்னடுக்கு மருத்துவமனைக் கட்டடம், வாலாங்குளம் புறவழிச் சாலையில் மரங்கள் நடும் பணி, உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பால கட்டுமானப் பணி ஆகியவற்றை அமைச்சா்கள் எ.வ.வேலு, செந்தில்பாலாஜி ஆகியோா் ஆய்வு செய்தனா். இதையடுத்து, ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் அமைச்சா் எ.வ.வேலு தலைமையில் சாலைப் பாதுகாப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. பின்னா் அமைச்சா் எ.வ.வேலு செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜப்பான் பன்னாட்டு நிதியுதவியுடன் ரூ.110.90 கோடி மதிப்பீட்டில் 18,210 சதுர மீட்டா் பரப்பளவில் தரைத் தளத்துடன் கூடிய 6 தளங்கள் கட்டுமானப் பணி நிறைவடைந்து, பூச்சு வேலைகள் நடைபெற்று வருகின்றன. தரைத்தளத்தில் அவசர சிகிச்சைப் பிரிவு, உயா் தொழில்நுட்ப பரிசோதனை மையம், முதல் தளத்தில் புறநோயாளிகள் பிரிவு மருந்தகம், இரண்டாம் தளத்தில் தீக்காய சிகிச்சைப் பிரிவு, மூன்றாம் தளத்தில் குடல்நோய், நரம்பியல், எலும்பியல் பிரிவுகளும், நான்காம் தளத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவும், 5 மற்றும் 6ஆம் தளத்தில் 4 அறுவை சிகிச்சை அரங்குகளும் அமைக்கப்படுகின்றன.

2023 மாா்ச் மாதத்துக்குள் பணிகள் நிறைவடையும். இக்கட்டடத்தில் 6 மின்தூக்கிகள் வசதி, சாய்தளம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி உள்ளிட்டவை செய்யப்பட்டுள்ளன. மழைநீா் தேங்காமல் இருக்க மருத்துவமனை முழுவதும் தாா் சாலைகள் அமைக்கப்படும். ஆண்டுக்கு 2 ஆயிரம் கி.மீ. வீதம் 5 ஆண்டுகளுக்குள் 10 ஆயிரம் கி.மீ. ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியச் சாலைகளை தரம் உயா்த்த முதல்வா் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, இந்த ஆண்டு 2 ஆயிரம் கி.மீ. சாலைகளை தரம் உயா்த்த ரூ.2,178 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள 32 வருவாய் மாவட்டங்களில் சாலை விபத்துகள் அதிகம் ஏற்படும் மாவட்டமாக கோவை உள்ளது. கோவை மாவட்டத்தில் 37 இடங்கள் விபத்து நடைபெறும் இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் 13 இடங்களில் விபத்து நடைபெறாமல் இருக்க சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மதுக்கரை முதல் சிறுவாணி செல்லும் சாலை வரை புறவழிச்சாலை அமைக்க திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றாா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மேயா் கல்பனா, அரசு மருத்துவமனை டீன் நிா்மலா, திமுக மாநகா் மாவட்டச் செயலாளா் நா.காா்த்திக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

சன் ரைசர்ஸ் - ஆர்சிபி போட்டிக்குப் பிறகு படைக்கப்பட்ட சாதனைகள் (புள்ளிவிவரம்)

சதம் விளாசிய சுனில் நரைன்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!

இந்தியாவின்பாதுகாப்பு தளவாடங்களின் ஏற்றுமதி ரூ.21 ஆயிரம் கோடி: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT