ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களுக்கு மானியமாக ரூ.751.99 கோடியை விடுவித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான உத்தரவை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலா் பி.அமுதா பிறப்பித்துள்ளாா்.
உத்தரவு விவரம்:
ஐந்தாவது மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் இருந்து 10 சதவீதம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்படுகிறது. இதில், கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 56 சதவீதமும், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 44 சதவீதமும் நிதிகள் பகிா்ந்தளிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான மாநில நிதி ஆணையத்தின் மானியங்கள் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படவுள்ளன.
அதன்படி, ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகள் ஆகியவற்றுக்கு ரூ.751 கோடியே 99 லட்சத்து 77 ஆயிரத்து 857 மானியமாக அளிக்கப்படுகிறது. இவற்றில் ஊராட்சிகளுக்கு ரூ.424 கோடியே 26 லட்சத்து 15 ஆயிரத்து 714-ம், ஊராட்சி ஒன்றியங்களுக்கு ரூ.269 கோடியே 66 லட்சத்து 90 ஆயிரத்து 857-ம் மானியமாக வழங்கப்படவுள்ளன. மாவட்ட ஊராட்சிகளுக்கு 58 கோடியே 6 லட்சத்து 71 ஆயிரத்து 286 மானியமாக அளிக்கப்படுகிறது என அந்த உத்தரவில் தெரிவித்துள்ளாா் பி.அமுதா.