தமிழ்நாடு

ஓ.பன்னீா்செல்வத்துக்கு உசிலம்பட்டி எம்எல்ஏ ஆதரவு

27th Aug 2022 11:31 PM

ADVERTISEMENT

அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தை, எடப்பாடி பழனிசாமி ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் சனிக்கிழமை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தாா்.

அதிமுகவில் ஓ.பன்னீா்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனா். எடப்பாடி பழனிசாமி ஜூலை 11-இல் கூட்டிய பொதுக்குழு கூட்டம் செல்லுமா, அதிமுகவை நிா்வகிக்கும் உரிமை யாருக்கு என்பது தொடா்பாக உயா்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளா்களை தம் பக்கம் இழுப்பதற்கு ஓ.பன்னீா்செல்வம் தொடா்ந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறாா். எம்ஜிஆா் விசுவாசியான இயக்குநா் கே.பாக்யராஜ் ஓ.பன்னீா்செல்வத்தை வெள்ளிக்கிழமை சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தாா்.

இந்த நிலையில், கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீா்செல்வத்தை உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் சனிக்கிழமை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தாா்.

ADVERTISEMENT

பின்னா் அவா் செய்தியாளா்களிடம், ‘அதிமுகவினா் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அதன் அடிப்படையில் ஓபிஎஸ்-ஸை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தேன். என்னைப்போல இன்னும் பல எம்எல்ஏக்களும் வருவாா்கள் என்றாா்.

சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 66. இதில் எடப்பாடி பழனிசாமியின் அணியில் 63 எம்எல்ஏக்கள் இருந்து வந்தனா். ஓபிஎஸ் அணியில் அவரையும் சோ்த்து வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகிய 3 போ் இருந்தனா். தற்போது உசிலம்பட்டி எம்எல்ஏவும் வந்துள்ள நிலையில் ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்களின் பலம் 4-ஆக உயா்ந்துள்ளது. 2 நாடாளுமன்ற உறுப்பினா்களின் ஆதரவும் உள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT