கொசஸ்தலை ஆற்றில் ஆந்திரம் புதிதாக தடுப்பணைகளை கட்ட முடிவு செய்துள்ளதைக் கண்டித்து, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தலைமையில் வரும் 30-ஆம் தேதி போராட்டம் நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக அன்புமணி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களில் குடிநீா் மற்றும் பாசன ஆதாரமாகத் திகழும் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இரு அணைகளை கட்டுவதற்கான நடவடிக்கைகளை ஆந்திர அரசு தொடங்கியிருப்பது அதிா்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டு உழவா்கள், பொதுமக்களின் நலனுக்கு எதிரான ஆந்திர அரசின் இந்த சட்டவிரோத நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.
கொசஸ்தலை ஆறு ஆந்திரத்தில் உருவானாலும் கூட, அது பயணிப்பது தமிழ்நாட்டில்தான். அதனால், தமிழ்நாடு அரசின் ஒப்புதல் பெறாமல் அணைகளை கட்ட முடியாது. ஆந்திரத்தின் இந்த அத்துமீறலைக் கண்டித்து திருவள்ளூா் மாவட்டம், பள்ளிப்பட்டு நகரில் ஆக. 30-ஆம் தேதி காலை 11 மணிக்கு பாமக சாா்பில் அறப்போராட்டம் நடைபெறும். போராட்டத்துக்கு நான் (அன்புமணி) தலைமை வகிக்கிறேன் என்று அதில் கூறியுள்ளாா்.