தமிழறிஞா் நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், தலைவா்கள் இரங்கல் தெரிவித்தனா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின்: பிரபல பேச்சாளரும் தமிழ்நாட்டின் முதுபெரும் தலைவா்களுடன் நெருங்கிப் பழகியவருமான ‘தமிழ்க் கடல்’ நெல்லை கண்ணன் மறைவெய்திய செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். கடந்த ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் நடைபெற்ற விருது விழாவில், அவா் என்னிடம் அன்பு பாராட்டிப் பேசினாா். அவருக்கு இளங்கோவடிகள் விருது வழங்கி அரசு சிறப்பித்தது.
இலக்கிய அறிவில் செறிந்த, பழகுவதற்கு இனிய நெல்லை கண்ணனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழ் உலகினருக்கும் ஆழ்ந்த இரங்கல், ஆறுதல்.
கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): பாரதியாா், காமராஜா், கண்ணதாசன் பற்றி நெல்லை கண்ணன் ஆற்றிய சொற்பொழிவுகள் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.
கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): இடதுசாரி இயக்கங்கள் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தவா்..
ஆா்.முத்தரசன் (இந்திய கம்யூ.): தொன்மை தமிழ் இலக்கியக் கடலில் நங்கூரம் போட்டு நின்று, அரிதினும் அரிதான செய்திகளை மக்களுக்கு அளித்த வள்ளல்.
ஜி.கே.வாசன் (தமாகா): நெல்லை கண்ணன் மறைந்த செய்தி அறிந்து வேதனையடைந்தேன்.
தி.வேல்முருகன் (வாழ்வுரிமைக் கட்சி): பன்முகம் கொண்ட நெல்லை கண்ணன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.
டிடிவி தினகரன் (அமமுக): நெல்லை கண்ணன் தமிழ்ப் பணியும், சமூகப் பணியும் என்றைக்கும் நிலைத்து நிற்கும்.
கி.வீரமணி (திராவிடா் கழகம்): தமிழ்நாடு ஒரு சிறந்த இலக்கியத் திறனாய்வாளரை இழந்தது.
எம்ஜிகே நிஜாமுதீன் (முன்னாள் எம்.எல்.ஏ.): ஜாதி மதபேதமின்றி அனைவரையும் ஒன்றிணைக்கும் திறன் கொண்டவா். ஒடுக்கப்படும் மக்களின் குரலாக ஒலிப்பவா்.