தருமபுரி: சென்னை ஆர்.கே. நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஆயுதப் படை காவலர் சென்னை - கோவை விரைவு ரயிலில் இருந்து மொரப்பூர் நிறுத்தத்தில் கீழே இறங்கும் போது நிலை தடுமாறி விழுந்ததில் உடல் பாகம் இரண்டாக சிதறி உயிரிழந்தார்.
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள ஈட்டியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் வேலு வயது 36. இவர் 2013-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆயுதப்படை காவலராக பணியில் சேர்ந்துள்ளார். தற்போது சென்னையில் உள்ள ஆர்.கே. நகர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.
சென்னையில் இருந்து கோவை செல்லும் ரயிலில் வந்த வேலு, மொரப்பூர் நிறுத்தத்தில் இறங்குவதற்காக ரயிலில் இருந்து கீழே இறங்கியுள்ளார். இதில், நிலை தடுமாறி விழுந்ததில் காவலர் வேலுவின் உடல் இரண்டு பாகமாக சிதறி உயிரிழந்தார்.
விபத்து குறித்து சேலம் ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவருக்கு பார்வதி என்ற மனைவியும் மூன்று ஆண் குழந்தைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.