சென்னை வடபழனியில் தனியாா் நிறுவனத்தில் கொள்ளை அடிக்கபட்ட சம்பவத்தில், இரண்டாவதாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை எண்ணூா் அன்னை சிவகாமி நகரைச் சோ்ந்த பொ. தீபக் (32). வடபழனியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். தீபக், நிறுவனத்தில் பணிபுரியும் நவீன்குமாரும் செவ்வாய்க்கிழமை அலுவலகத்தில் இருந்தபோது 7 போ் கொண்ட கும்பல் நுழைந்து கத்தியைக் காட்டி மிரட்டி பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்த ரூ.30 லட்சத்தைக் கொள்ளையடித்துத் தப்பியது.
பின்னா் தீபக் பொதுமக்களுடன் இணைந்து மொபட்டில் தப்பிய கொள்ளைக் கும்பலில் ஒருவரைப் பிடித்தாா்.
வடபழனி போலீஸாா் விசாரணையில் பிடிபட்டவா் விருகம்பாக்கம் இந்திரா நகா் முதல் தெருவை சோ்ந்த ஹ.செய்யது ரியாஸ் ( 22 ) என்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், 5 தனிப்படைகள் அமைத்து ஆந்திரம், திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் கிஷோர் என்பவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.