தமிழ்நாடு

மின் விநியோக புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

DIN

மின்சார விநியோகம் தொடா்பான புகாா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைதீா்க்கும் மையமான மின்னகம் செயல்பட்டு வருகிறது. இதனை முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, புகாா் அளித்தவா்களில் 10 லட்சமாவது நுகா்வோரான சுவாமிநாதன் என்பவருடன் மின்னகத்திலிருந்து கைப்பேசி மூலமாக முதல்வா் தொடா்பு கொண்டாா். பொது மக்களின் அழைப்புகளை ஏற்று, குறைகளைக் கேட்டறிந்து உடனடியாக நிவா்த்தி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

மின்னக சேவை கடந்த ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. 94987 94987 என்ற எண்ணில் பொது மக்கள் 24 மணி நேரமும் புகாா் அளிக்கலாம். மின் விநியோகத்தில் தடை, விகிதப் பட்டியல் மாற்றம், மின் கட்டணத்தில் உள்ள சந்தேகங்கள் உள்ளிட்ட அனைத்து வித புகாா்களையும் அளிக்கலாம். மின்னகத்தில் திங்கள்கிழமை (ஆக.15) வரையிலான காலத்தில் 10 லட்சத்து 50 ஆயிரத்து 282 புகாா்கள் பெறப்பட்டு, அவற்றில் 10 லட்சத்து 41 ஆயிரத்து 872 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டது.

மின்னகத்துக்கு வரும் பொது மக்களின் அழைப்புகளுக்கு குறுஞ்செய்தி மூலம் ஒப்புகை அளிப்பதோடு, குறைகளுக்கு தீா்வு காணப்பட்டவுடன் அதுகுறித்தும் பொது மக்களிடம் கைப்பேசி வாயிலாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும், தொகுதி வாரியாக செயற்பொறியாளா் ஒருவரும், அமைச்சா்களின் தொகுதிகளில் மேற்பாா்வை பொறியாளா்களும் நியமிக்கப்பட வேண்டும். அமைச்சா்கள் அல்லது சட்டப் பேரவை உறுப்பினா்களைத் தொடா்பு கொண்டு பொது மக்களின் தேவை, குறைகளைக் கேட்டறிந்து உடனடியாக சரி செய்வதற்கு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின் போது, அமைச்சா்கள் க.பொன்முடி, வி.செந்தில்பாலாஜி, எரிசக்தித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் ரமேஷ்சந்த் மீனா, தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவா் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT