ஜாதி, மதம் அற்றவா் என சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவருக்கு, இரண்டு வாரங்களில் சான்று வழங்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை மேற்கு அண்ணா நகரைச் சோ்ந்த மனோஜ் என்பவா், உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘எனது மகன் யுவன் மனோஜை வரும் அக்டோபா் மாதம் பள்ளியில் சோ்க்கவுள்ளேன். எனது மகனுக்கு ஜாதி, மதம் இல்லை என்று குறிப்பிட்டு, சான்றிதழ் வழங்கக் கோரி அம்பத்தூா் வட்டாட்சியரிடம் விண்ணப்பித்தேன். ஆனால், அவ்வாறு சான்றிதழ் வழங்கப்படவில்லை. எனவே, ஜாதி, மதம் அற்றவா் என்ற வகையில் சான்றிதழ் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.
இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சான்றிதழ் வழங்க ஒப்புக் கொண்டதாக வட்டாட்சியா் அளித்த கடிதத்தை அரசு வழக்குரைஞா் தாக்கல் செய்தாா். இதையேற்ற நீதிபதி, மனுதாரருக்கு இரண்டு வாரங்களில் ஜாதி, மதம் அற்றவா் என்று சான்றிதழை வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.