தூத்துக்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டி கடற்கரையில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை கடலோர காவல் குழும போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், படகுடன் தப்பி சென்ற கடத்தல்காரர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி சுற்றுவட்டார கடற்பகுதியில் இருந்து இலங்கைக்கு அடிக்கடி கஞ்சா, பீடி இலைகள், விராலி மஞ்சள் உள்ளிட்ட பல பொருள்கள் கடத்தி வருவாதாக புகார்கள் எழுவதால் அதனை கண்காணிக்கவும், கடத்தல்களை தடுக்கவும் கடலோர பாதுகாப்பு குழுவினர் மற்றும் க்யூ பிரிவு உள்ளிட்ட போலீசார் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அவ்வப்போது கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து கடத்தல் செய்யப்படும் பொருள்களை பறிமுதல் செய்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இதையும் படிக்க | இபிஎஸ் தேர்வு செல்லாது: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
இந்நிலையில், தூத்துக்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்த இருப்பதாக கடலோர காவல் குழும போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, வெள்ளப்பட்டி கடற்கரையில் படகில் இருந்த சிலர் தப்பிச் சென்றனர். இருப்பினும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த படகில் இருந்த 28 பீடி இலை பண்டல்களை கடலில் வீசி சென்றனர். இதனை பறிமுதல் செய்த கடலோர காவல் குழும போலீசார் படகுடன் தப்பிச் சென்ற கடத்தல்காரர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலை மதிப்பு ரூ.20 என கூறப்படுகிறது.