மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மஞ்சள் செம்பருத்திச் செடியில் பூத்த சிவப்பு செம்பருத்திப் பூவை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
மயிலாடுதுறை வட்டம், முளப்பாக்கம் பிரதான சாலை பகுதியில் வசிக்கும் வருவாய்த்துறையில் பணியாற்றும் சக்திவேல் என்பவர் தனது வீட்டின் மாடியில் மூலிகைத் தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறார். மேலும், பல்வேறு பூச்செடிகளையும் வளர்த்து வருகிறார்.
இவர் தனது வீட்டு வாசலில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நட்டுவைத்த மஞ்சள் பூ வகையைச் சேர்ந்த ஒற்றை செம்பருத்திச் செடி வளர்ந்து ஆறு மாதங்களில் பூக்கள் பூக்கத் தொடங்கியது.
அது முதல் ஐந்து இதழ்களைக் கொண்ட இந்த மஞ்சள் செம்பருத்தி நாள்தோறும் பூத்துக் குலுங்கும் நிலையில், ஒரே ஒரு செம்பருத்திப் பூ மட்டும் சிவப்பு நிறத்தில் பூத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
இதனை அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் ஏராளமானோர் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.