தலைவாசல் அருகே லத்துவாடி கிராமத்தில், தனியார் பள்ளி பேருந்தின் முன்பக்க சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை தாய் கண் முன்னே பலியானது.
சேலம் மாவட்டம், வீரகனூரையடுத்த, லத்துவாடி கிராமத்தில் வசித்து வருபவர்கள் காசி-சுதா தம்பதிகள். இவர்களுக்கு வேதா ஸ்ரீ, பவானிகா இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், புதன்கிழமை காலை தனது வழக்கமான சுமைதூக்கும் பணிக்கு காசி சென்ற நிலையில், தாய் சுதா தனது 4 வயது மூத்த மகள் வேதா ஸ்ரீயை, வீரகனூரில் இயங்கும் தனியார் பள்ளிக்கு அனுப்பி விடுவதற்காக, இளைய மகள் பவானிகாவுடன் சாலை ஓரமாக காத்திருந்தார்.
இதையும் படிக்க | மஞ்சள் செம்பருத்தி மரத்தில் பூத்த சிகப்பு செம்பருத்தி!
அப்போது, தனது ஒன்னறை வயது இளைய மகள் பவானிகா பள்ளி பேருந்தின் முன்பக்க சக்கரத்தில் சிக்கியுள்ளதை கவனிக்காத தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் சுதாகர் வாகனத்தை நகர்த்தியுள்ளார். அப்பொழுது தாய் கண்ணெதிரே குழந்தை முன்பக்க சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக பலியானது. இதை பார்த்த தாய் கதறி அழுதார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து குழந்தையை மீட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த வீரகனூர் காவல்துறையினர் விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
ஓட்டுநர் சுதாகரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.