மதுரை: கடந்த 13ம் தேதி மதுரை விமான நிலையத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாகனத்தின் மீது காலணி எறிந்த சம்பவத்தில் பாஜக மகளிர் அணி மாவட்ட தலைவி உள்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலணி எறிந்த சம்பவம் தொடர்பான வழக்கில் ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது 3 பேரையும் சேர்த்து மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் (13.08.22) மதுரை விமான நிலையத்தில் மறைந்த ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்த வந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாகனத்தின் மீது பாஜகவினர் காலணியை வீசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையும் படிக்க.. பீட்சா மாவு மீது இவையெல்லாமா? முகம் சுளிக்க வைக்கும் டோமினோஸ்
எனவே இது தொடர்பாக மதுரை அவனியாபுரம் காவல்துறையினர் நேற்று முன்தினம் பாஜக மதுரை மாநகர் மாவட்ட துணைத் தலைவர் குமார் என்ற மார்க்கெட் குமார் (வயது 48), மாவட்ட பிரச்சார பிரிவு செயலாளர் பாலா (வயது 49), மேலும் திருச்சியை சேர்ந்த கோபிநாத் ( வயது 42), ஜெய கிருஷ்ணா (வயது 39), கோபிநாத் (வயது 44), முகமது யாகூப் (வயது 42) முன்னாள் மண்டல தலைவர் ஜெயபால் உள்பட ஏழு பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவனியாபுரம் காவலர்கள் கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து மேலும் 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அடுத்து இதுவரை மொத்தம் 31 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து 7 பேர் கைதான நிலையில் நேற்று நள்ளிரவில் தல்லாகுளம் காவல் உதவி ஆணையர் சுரேஸ்குமார் தலைமையில், காவலர்கள் கருமாத்தூர் அருகே வாகைகுளம் பகுதியில் பதுங்கி இருந்த மாவட்ட மகளிர் அணி தலைவி, தனலெஷ்மி, மாவட்ட மகளிர் செயலாளர் சரண்யா மற்றும் தெய்வானை உள்பட 3 பேரை கைது செய்தனர். 3 பேரும் விசாரணைக்காக அவனியாபுரம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
ஏற்கனவே ஏழு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மூன்று பேரும் சேர்த்து மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மண்டல தலைவர் ஜெயபால் நிபந்தனை ஜாமீனில் வெளியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.