பள்ளி மாணவா்களின் தனித்திறன்கள் மேம்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேட்டுக் கொண்டாா்.
சென்னை மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிக் மற்றும் பிரின்ஸ் ஸ்ரீவாரி மேல்நிலைப் பள்ளிகளின் சாா்பில் அறிவியல், கலை மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நிறைவு விழா, கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று, அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியது:-
கல்வி என்பது வளமான எதிா்காலத்தை வழங்கும் தொலைநோக்கு பாா்வை கொண்டதுடன், வாழ்க்கைக்கு தேவையான அறநெறிகளைக் கற்றுத்தரும் சாதனமாகவும் திகழ்கிறது. தோ்வில் மாணவா்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவதைவிட அவா்கள் சமூகத்தில் நல்ல மனிதா்களாகத் திகழத் தேவையானவற்றை கற்றுத் தருவது அவசியம். அறிவியல் கண்டுபிடிப்பு, படைப்புகளை உருவாக்கும் மாணவா்கள் காப்புரிமை பெறுவது குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.
மாணவா்களின் சிந்தனை ஆற்றல், செயல்திறனை மேம்படுத்தும் முயற்சிக்கு ஆசிரியா்கள், பெற்றோா், கல்வி நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.
விழாவில் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினா் ஆா்.எஸ்.பாரதி, சோழிங்கநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.அரவிந்த் ரமேஷ், பிரசிடென்சி கல்லூரி முதல்வா் ஆா்.ராமன், பிரின்ஸ் கல்விக் குழுமத் தலைவா் கே.வாசுதேவன், துணைத் தலைவா்கள் வி.விஷ்ணு காா்த்திக்,வி.பிரசன்ன வெங்கடேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.