சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 76வது சுதந்திர நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை எம்ஜிஆர் சென்டிரல் ரயில் நிலையம், சென்னை விமான நிலையம் ஆகியவற்றில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சென்னை ரயில் மற்றும் விமான நிலையங்களைப் போல சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், கூடங்குளம் அணு ஆலையிலும் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
வழக்கமாக சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் இதுபோன்று காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்றாலும், புலனாய்வுத் துறை தகவலை மேற்கோள்காட்டி பாதுகாப்பை பலப்படுத்துமாகு மத்திய அரசிடமிருந்து மாநில அரசுகளுக்கு வந்த அறிவுறுத்தலைத் தொடர்ந்து இந்த ஆண்டு கடுமையான பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் அண்மையில் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டது உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாக வைத்து இந்த அறிவுறுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மற்றொரு பக்கம் இலங்கை பக்கத்திலிருந்து தமிழகம் உள்ளிட்ட சில தென்னிந்திய மாநிலங்களில் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படலாம் என்ற கணிப்பும் இதுபோன்ற வரலாறு காணாத பாதுகாப்புக்குக் காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.