சுதந்திரதின விழாவையொட்டி, சென்னை தலைமைச் செயலகப் பகுதியில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி (திங்கள்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இது குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை தலைமைச் செயலகத்தில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தையொட்டி, அன்று காலை 6 மணி முதல் நிகழ்ச்சிகள் முடியும் வரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதன்படி, உழைப்பாளா் சிலை முதல் ரிசா்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரையும், கொடி மரச்சாலையிலும் அனுமதி அட்டை உள்ள வாகனங்கள் தவிர பிற அனைத்து வாகனங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படும்.
காமராஜா் சாலையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வாலாஜா சாலை, அண்ணாசாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம், வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை வந்தடையலாம்.
பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக காமராஜா் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வடக்கு கோட்டை பக்க சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணா சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக காமராஜா் சாலையை வந்தடையலாம்.
அண்ணா சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் வழியாக பாரிமுனையை சென்றடையலாம். முத்துசாமி சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக காமராஜா் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜா் சாலைக்கு செல்லலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.