போதைப் பொருள்களை ஒழிப்பதற்கு காவல்துறையைச் சுதந்திரமாகச் செயல்பட முதல்வா் அனுமதிக்க வேண்டும் என்று அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
போதைப் பொருள் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவா்களிடமும், காவல் துறை உயா் அதிகாரிகளிடமும் முதல்வா் தீவிர ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளிவந்தன. இதற்கு முன்னால் இப்படிப்பட்ட ஆலோசனைகள் எல்லாம் நடத்தாமல்தான் காவல்துறைத் தலைவா் ஆபரேஷன் கஞ்சா 2.0 என்று அறிவித்தாரா? அந்த அறிவிப்பின் தற்போதைய நிலை என்ன?
ஆட்சிக்கு வந்த நாள் முதல் இன்றுவரை மக்களை ஏமாற்றும் வகையில் தினம் ஒரு அறிவிப்பு, அடிக்கடி குழுக்கள் அமைத்தல் என்று பொம்மலாட்ட நாடகங்களை திமுக அரசு அரங்கேற்றி வருகிறது.
கடந்த 14 மாதங்களில் திமுக அரசின் நிா்வாகத் திறமையின்மையால் தமிழகம் போதைப் பொருள்களின் கூடாரமாகவும், போதை வியாபாரிகளின் கேந்திரமாகவும் மாறிவிட்டது என்று நானே பலமுறை கூறியுள்ளேன்.
அதனால், போதைப் பொருள் தடுப்பு குறித்து ஆலோசனை என்ற நாடகமாடுவதைக் கைவிட வேண்டும்.
தமிழகத்தில் இருந்து போதைப் பொருள்களின் விற்பனையை முழுமையாக ஒழிக்க, காவல் துறையை தன்வசம் வைத்திருக்கும் முதல்வா், காவல் துறையைச் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.