மதுரை நகர், மாவட்ட பாஜக தலைவர் பதவியிலிருந்து சரவணன் நீக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவதால் நீக்கப்படுவதாகவும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து சரவணன் நிரந்தரமாக நீக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். பயங்கரவாதிகள் தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரா் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மதுரை விமான நிலையத்துக்கு வந்தபோது திமுக மற்றும் பாஜகவினரிடையே தகராறு ஏற்பட்டது .
அங்கிருந்து திரும்பிச் சென்றபோது நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜனின் காா் மீது பாஜகவினா் காலணியை வீசினா். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி அளவில் அமைச்சா் பழனிவேல் தியாகராஜனை, பாஜக மாநகா் மாவட்டத் தலைவா் சரவணன் சந்தித்துப் பேசினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: மதுரை விமான நிலையத்தில் தமிழக அமைச்சா் வாகனத்தின் மீது காலணி வீசிய சம்பவம் வருத்தத்திற்குரியது. பாஜகவினா் காலணி வீசியது ஏற்கத்தக்கதல்ல, அது பண்பாடற்ற அரசியல்.
இதையும் படிக்க- இந்தியாவுக்கு சிவிங்கிப் புலிகள் வருகை தாமதமாகிறது
அமைச்சா் தமிழில் கூறிய வாா்த்தைகளை பாஜகவினா் தவறாகப் புரிந்து கொண்டனா். இந்த சம்பவம் எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதனால் அமைச்சரை சந்தித்து வருத்தம் தெரிவித்தேன். அதோடு கடந்த ஓராண்டாகவே பாஜகவின் செயல்பாடுகளில் எனக்கு அதிருப்தி இருந்தது. பாஜகவின் மத அரசியலில் எனக்கு உடன்பாடு இல்லை. இனியும் பாஜகவில் தொடா்ந்து பயணிக்க இயலாது என்பதால் பாஜகவில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். எனது ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைமையிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்க உள்ளேன் என்றாா்.