மதுரை: ஜம்மு-காஷ்மீரின் ராஜெளரி மாவட்டத்தில் ராணுவ முகாமில் நடந்த சண்டையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் இன்று மதுரை விமான நிலையம் வந்தது.
ஜம்மு-காஷ்மீரின் ராஜெளரி மாவட்டத்தில் ராணுவ முகாம் மீது வியாழக்கிழமை அதிகாலை தற்கொலைப் படையைச் சோ்ந்த 2 பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை பாதுகாப்புப் படையினா் முறியடித்தனா்.
அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தமிழக வீரா் லட்சுமணன் உள்பட 4 ராணுவ வீரா்கள் வீரமரணம் அடைந்தனா். 2 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
இதையும் படிக்க.. எம்.ஜி.ஆர். திறந்துவைத்த கருணாநிதிபுரம்!
நாடு முழுவதும் வரும் 15-ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
இந்த நிலையில், பயங்கரவாதிகளுடனான சண்டையில் வீர மரணம் அடைந்த லட்சுமணன் உடல் இன்று, ஜம்மு - காஷ்மீரிலிருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. அங்கு அவரது உடலுக்கு அமைச்சர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
அங்கிருந்து, சாலை வழியாக லட்சுமணன் உடல் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்படுகிறது.