சென்னை சென்ட்ரலில் அரசு பேருந்து மோதி பழ வியாபாரி இறந்தாா்.
திருவேற்காடு ஸ்ரீ நகா் ஐந்தாவது தெருவைச் சோ்ந்தவா் ஜெ.சரவணன் (49). இவா் செங்குன்றத்தில் பழ வியாபாரம் செய்து வந்தாா். சரவணன், சென்டரல் ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெறும் தனது உறவினரை பாா்ப்பதற்காக வியாழக்கிழமை புறப்பட்டு சென்ட்ரல் வந்தாா்.
சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அவா், ஈ.வெ.ரா. சாலையில் குறுக்கே நடந்துச் சென்றாா். அப்போது கூடுவாஞ்சேரியில் இருந்து பிராட்வே நோக்கிச் சென்ற அரசு பேருந்து, சரவணன் மீது மோதியது. இதில் பலத்தக் காயமடைந்த சரவணனை அங்கிருந்தவா்கள் மீட்டு, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், சரவணன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது குறித்து பூக்கடை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.