செய்யாறை அடுத்த உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள 27 நட்சத்திர விருட்சக விநாயகர் கோயிலில் பூஜைக்குப் பின்பு காகம் ஒன்று தினமும் பிரசாதம் சாப்பிடும் நிகழ்வு பக்தர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் அமையப் பெற்றது 27 நட்சத்திர விருட்சக விநாயகர் கோயில். இக்கோயில் தவத்திரு. சச்சிதானந்த சதாசிவ சரஸ்வதி சித்தர் சுவாமி வழிகாட்டுதலின் படி அமைக்கப்பட்டதாகும். இக்கோயிலில் ருத்ராட்ச லிங்கேஸ்வரர், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர், தாரை சமேத தேவகுரு என்ற பிரகஸ்பதி, சனீஸ்வர பகவான், ராகு, கேது மற்றும் 27 நட்சத்திர அதிதேவதைகளுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன.
மேலும், கோயில் வளாகத்தில் 27 நட்சத்திர விருட்சகங்கள் மற்றும் 12 ராசிகளுக்கான விருட்சகங்கள் உள்ளன. இந்நிலையில், கோயில் அமைய வழிகாட்டிய, சித்தர் சுவாமிகள் 2018 - ல் முக்தி அடைந்தார். அதன்பின் தினமும் கோயிலுக்கு வரும் காகம் ஒன்று, கோயில் அர்ச்சகர் கோபி கிருஷ்ணன் கைகளில் கொடுக்கும் பிரசாதத்தைக் கடந்த 4 வருடங்களாக சாப்பிட்டுச் செல்கிறது.
கோயிலில் தினமும் காலை 8:00 மணிக்கு பூஜைகள் நடைபெறும் அப்போது கோயில் பிரகாரத்தில் காகம் அமர்ந்துகொண்டு இருக்கும்.
இதுகுறித்து கோயில் நிர்வாகி ஒருவர் கூறுகையில்,
காகம், பூஜை முடிந்தவுடன் கா... கா... எனக் கரைந்தவாறு அர்ச்சகரைக் கூப்பிட தொடங்கியது. அர்ச்சகரும் சுவாமிக்கு நெய்வேத்தியம் படைத்த பிரசாதத்தை காகத்திற்கு தினமும் கொடுக்கத் தொடங்கினார். காகம் அர்ச்சகர் கோபி கிருஷ்ணன் கையில் உள்ள பிரசாதத்தை ருசித்து சாப்பிடத் தொடங்கியது.
இந்த காகம் கடந்த 4 வருடங்களாகத் தினமும் காலை, மதியம் பூஜை நேரங்களில் கோயில் வளாகத்தில் வந்து அமர்ந்து பூஜைகள் முடிந்ததும், அர்ச்சகர் தரும் பிரசாதத்தை சாப்பிட்டுச் செல்கிறது. தற்போது கோயிலுக்கு வந்து பிரசாதம் சாப்பிடும் காகங்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்து உள்ளது. இது கோயில் பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முக்தி அடைந்த சித்தர் சுவாமிகள் தான், காகம் ரூபத்தில் வருவதாக இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் கருதுகின்றனர்.