மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கன்னார் தெரு பகுதியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் மாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பால்குடம் தீச்சட்டி சுமந்து வந்து கோயிலில் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர்.
மானாமதுரை கன்னார்தெரு மாரியம்மன் கோயிலில் விஸ்வகர்மா சமூகத்தினர் சார்பில் ஆடி கடைசி வெள்ளி உற்சவ விழா மற்றும் முளைப்பாரி உற்சவ விழா நடைபெற்றது. இதையொட்டி காப்புக்கட்டி விரதம் இருந்து வந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள் மானாமதுரை வைகையாற்றிலிருந்து பால்குடம் சுமந்தும், கன்னத்தில் அலகு குத்தியும் மேலதாளத்துடன் ஊர்வலமாக கோயிலுக்கு புறப்பட்டு வந்தனர்.
இதையும் படிக்க | எம்.ஜி.ஆர். திறந்துவைத்த கருணாநிதிபுரம்!
மானாமதுரை கன்னார்தெரு மாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் அலகு குத்தி தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றினர்.
பின்னர், கோயிலுக்கு எதிரே பரப்பி வைக்கப்பட்டிருந்த தீக் குண்டத்தில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றினர். பல பக்தர்கள் இடுப்பில் குழந்தைகளை கட்டிக்கொண்டு தீ மிதித்தனர். அதன்பின் மாரியம்மனுக்கு அபிஷேகங்கள், ஆராதனைகள் சிறப்பு பூஜைகள் நடந்தது.
விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மாரியம்மனை தரிசனம் செய்தனர். கோயிலில் நடந்த அன்னதானத்தில் திரளானோர் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விஸ்வகர்மா சமூகத்தினர் செய்திருந்தனர்.