3 நாள்கள் தொடர் விடுமுறை என்பதால் இன்றும், நாளையும் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 610 சிறப்பு பேருந்துகளை போக்குவரத்துத்துறை இயக்க உள்ளது.
நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி(திங்கள்கிழமை) கொண்டாடப்படுகிறது. எனவே அன்றைய தினம் பொது விடுமுறையாகும். இதனிடையே நாளை மற்றும் நாளை மறுநாளும் வார இறுதி விடுமுறை வருவதால் அடுத்த 3 நாள்கள் தொடர் விடுமுறை நாள்களாக உள்ளது.
இதை முன்னிட்டு சென்னையில் பணியாற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லவர். அவ்வாறு சென்னையில் இருந்து பிற ஊர்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி இன்றும், நாளையும் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 610 சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை இயக்க உள்ளது. மேலும் விடுமுறை முடிந்து வெளியூர்களில் இருந்து சென்னை திரும்ப போதுமான பேருந்துகளை இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.