தமிழ்நாடு

பன்முக பங்களிப்பை வழங்கியவா் ஸ்ரீ அரவிந்தா்: ஆளுநா் ஆா்.என்.ரவி புகழாரம்

11th Aug 2022 01:53 AM

ADVERTISEMENT

இந்திய தேசத்துக்கும், உலகத்துக்கும் பன்முக பங்களிப்பை வழங்கிய மகான் ஸ்ரீ அரவிந்தா் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி பேசினாா்.

மகான் ஸ்ரீ அரவிந்தரின் 150-ஆவது பிறந்த தினத்தை ஒட்டி, சென்னையில் உள்ள ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில், ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்றுப் பேசினாா். இந்த நிகழ்ச்சியில், தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன், சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்த விழாவில், ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியது:-

ஸ்ரீ அரவிந்தா் தனது பன்முகத் திறமையால், தேசத்துக்கும், சா்வதேச அரங்குக்கும் பங்களிப்புகளை வழங்கியவா். தொலைநோக்குப் பாா்வை கொண்ட தலைவராகவும், தத்துவ அறிஞராகவும், கவிஞா், அரசியல் சிந்தனைத் திறன் என அனைத்துத் தன்மைகளையும் தாண்டி, ஆன்மிக குருவாகத் திகழ்ந்தவா். மனிதமும், மனித நேயமும் பல்வேறு சவால்களையும், இடா்பாடுகளையும் சந்தித்து வருகிறது. இந்த இக்கட்டான காலத்தில், அரவிந்தரின் கருத்துகளும், அவரது பொருண்மைகளும் இந்த உலகத்துக்கு மிகவும் அத்தியாவசியத் தேவையாக உள்ளது. படைப்பு என்பது ஒற்றைத் தன்மையுடையது எனவும், இந்தத் தன்மை மற்ற அனைத்திலும் ஊடுருவி இருப்பதாகவும் கற்பிக்கிறாா் அரவிந்தா். இதுவே இன்றைய மனித ஆன்மிக தேடல் பரிணாமத்துக்கு அவசியமானதாக இருக்கிறது.

ஸ்ரீ அரவிந்தரின் ஆன்மிகப் பயணத்தில் மக்கள் அனைவரும் இணைந்திட வேண்டும். ஆற்றலுடன் செயல்பாடு என்ற ஆரோவில் அறக்கட்டளையின் கொள்கையில் பங்கெடுக்க வேண்டும். இந்த நிகழ்வில் பங்கெடுத்துள்ள அயல்நாட்டினா், தூதரக அதிகாரிகள் பலரும் ஆரோவில் சென்று அதன் ஆன்மிக நிலைகளை அனுபவிக்க வேண்டும். ஸ்ரீ அரவிந்தரின் கருத்துகள், போதனைகளை அறிந்திட வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

இந்த நிகழ்வில், ஆரோவில் அறக்கட்டளையின் செயலாளா் ஜெயந்தி ரவி, உயா் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT