தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு ரூ.9.19 கோடி மதிப்பிலான 153 டன் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை கலைவாணா் அரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற போதைப் பொருள்கள் தடுப்பு குறித்த மாவட்ட ஆட்சியா்கள், காவல் துறை உயரதிகாரிகளுடனான கூட்டத்துக்குப் பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக போதைப் பொருள் பயன்பாடு அதிகமாக உள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் போதைப் பொருள்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டாலும், சென்னை உள்பட அனைத்து இடங்களிலும் அவை எளிதாக கிடைத்தன. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இதனை கட்டுப்படுத்த பல தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
புகையிலை மற்றும் நிகோடின் கலந்த உணவுப் பொருள்களை தயாரித்தல், சேமித்து வைத்தல், விநியோகித்தல், வாகனங்களில் எடுத்துச் செல்லுதல், விற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீது உணவுப்பாதுகாப்பு துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
2013 முதல் 2022 ஜூன் மாதம் வரை ரூ.38.99 கோடி மதிப்புள்ள 952 டன் குட்கா, பான்மசாலா கைப்பற்றப்பட்டுள்ளன. தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் 2022 ஜூன் வரை ரூ.9.19 கோடி மதிப்புள்ள 152.96 டன் குட்கா பான்மசாலா பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், குட்கா, பான்மசாலா விற்பனை செய்த 75 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் இருந்து ஏறத்தாழ 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்கும் போதை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெறவுள்ளன என்றாா் அவா்.