ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே புதன்கிழமை அதிகாலை டீ கடையில் எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் படுகாயங்களுடன் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராணிப்பேட்டை அடுத்த வானாபாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (62), இவர் அதே பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை 5 மணி அளவில் வழக்கம்போல் டீ கடையில் எரிவாயு அடுப்பை பற்ற வைத்து டீ போட்டு வாடிக்கையாளருக்கு டீ கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென எரிவாயு கசிவு ஏற்பட்டு தீ பற்றிக் கொண்டது.
டீ கடையில் எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து நாசமான பொருள்கள்.
இதில் டீ குடிக்க வந்த ராதாகிருஷ்ணன் (55), வேணு (45), சேட்டு (70 ) சேகர் உள்ளிட்ட ஐந்து பேருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த தீ விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.