மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயிலில் நடைபெற்று வரும் ஆடிப் பிரமோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வாக பூப்பல்லக்கு உற்சவம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயிலில் ஆடி பிரமோற்சவ விழா கடந்த 3 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மானாமதுரை சுந்தரபுரம் கடைவீதியார் மண்டபடியை முன்னிட்டு மண்டகப்படிதாரர்கள் கோயிலிலிருந்து மேளதாளம் முழங்க அழகரை அழைத்துக் கொண்டு சுந்தரபுரம் வீதியில் அமைக்கப்பட்டிருந்தது மண்டபடிக்கு கொண்டு வந்து சேர்ந்தனர். அங்கு இரவு அழகருக்கு திருமஞ்சனம் நடைபெற்று சிறப்பு பூஜைகள், தீபாரதனைகள் நடைபெற்றது. அதன்பின் அழகர் கடைவீதிகளில் பத்தி உலாத்துதல் நடைபெற்றது. பின்பு மண்டகப்படிக்கு வந்து சேர்ந்த அழகர், அங்கிருந்து கோயிலுக்கு பூப்பல்லக்கில் புறப்பாடானார்.
இதையும் படிக்க | போதைப் பொருள் விற்றால் சொத்துகள் முடக்கம்: முதல்வர் ஸ்டாலின்
பூப்பல்லக்கில் பவனி வந்த ஸ்ரீ வீர அழகர்
செண்டை மேளம் முழங்க வாண வேடிக்கையுடன் சுந்தரபுரம், செட்டியத் தெரு, நல்ல தம்பியா பிள்ளைத் தெரு, புதுத்தெரு, சிவகங்கை ரோடு, மாரியம்மன் கோயில் தெரு, பழைய போஸ்ட் ஆபீஸ் தெரு, பிருந்தாவனம் உள்ளிட்ட வீதிகளில் பவனி வந்த அழகர் புதன்கிழமை அதிகாலையில் கோயிலுக்குச் சென்றடைந்தார்.
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். வீதிகளில் மக்கள் அழகரை வரவேற்று பூஜைகள் நடத்தி தரிசனம் செய்தனர்.